மன்னாரை தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய அச்சுறுத்தல்: கடந்த வருடத்தை விட பாதிப்பு அதிகம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் 2016ஆம் ஆண்டு 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2017ஆம் ஆண்டு 4700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

புதிதாக மலேரியா நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஆரம்பத்தில் மன்னார் மாவட்டத்தில் இருந்த மலேரியா அச்சுறுத்தல் தற்போது யாழ். மாவட்டத்திற்கு வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

பருவமழை ஆரம்பித்திருக்கும் நிலையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கின்றது. கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் 1,700 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த வருடம் நவம்பர் மாதம் வரையில் சுமார் 4,700 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதேசமயம் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும் மலேரியா நுளம்பு பெருக்கம் பல இடங்களில் அவதானிக்கப்பட்டிருக்கின்றது.

ஆரம்பத்தில் மன்னார் மாவட்டத்தில் அவதானிக்கப்பட்ட இந்த மலேரியா நுளம்பு தற்போது யாழ். மாவட்டத்தில் பல இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த மலேரியா நுளம்புகள் கிணறு, தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவான இடங்களில் அதிகளவில் பெருகி வருகின்றது. இந்நிலையில் நுளம்பு பெருகும் சாத்தியங்கள் உள்ள பொதுமக்களின் கிணறுகளில் சுகாதார திணைக்களத்தின் ஊடாக மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன.

மக்களின் பாவனையில் இல்லாத கிணறுகளுக்கு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றது. எனவே இந்த விடயத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது.

உதாரணமாக மலேரியா நுளம்பு களை கட்டுப்படுத்துவதற்கான மீன் குஞ்சுகளை சுலபமாக பெற முடியாதுள்ளது. எனவே அந்த மீன் குஞ்சுகள் உள்ளவர்கள் மீன்களை தந்து உதவலாம்.

அதேபோல் நுளம்பு பெருகும் இடங்களை அழித்து நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் மக்கள் உதவிகளை வழங்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *