தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீடு கோபாலபுரத்தில் உள்ளது.நேற்று பெய்த மழையில் வீட்டு காம்பவுண்டுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது
சென்னையில் நேற்று இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே ஸ்தம்பித்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது.
குடிசைப் பகுதிகள் மட்டுமின்றி வி.ஐ.பி.க்கள் வசிக்கும் பாதுகாப்பான பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அண்ணாநகர், அடையார், போயஸ்கார்டன், கோபாலபுரம், போட்கிளப், பெசன்ட்நகர், கே.கே.நகர், நுங்கம்பாக்கம் போன்ற இடங்களில் வசதியான வர்கள் வசிக்கும் பகுதிகளிலும் மழைநீர் வீடுகளை சுற்றி நிற்கிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீடு கோபாலபுரத்தில் உள்ளது. இவரது வீட்டை சுற்றி குடிசைகளே கிடையாது. ஆனாலும் நேற்று பெய்த மழையில் வீட்டு காம்பவுண்டுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது.
கார் நிறுத்தும் இடம், பாதுகாவலர்கள் அமரும் இடத்தில் 1 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வெளியேற்ற முடியாமல் தவித்தனர். இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து தண்ணீரை வெளியேற்றினார்கள். பின்னர் மின் இணைப்பு கொடுக்கப் பட்டது.
நகரில் மழைநீர் வடிகால் சரிவர தூர்வாரப்படாததால் கோபாலபுரம் மட்டுமின்றி பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதை காண முடிந்தது.
ரோட்டின் நடுவே உள்ள பாதாள சாக்கடை மூடி வழியாகவும் கழிவு நீர் ரோட்டுக்கு மேலே மழைநீருடன் கலந்து ஓடுகிறது.
அந்த தண்ணீரில் கால்பட்டால் பிசுபிசு என துர்நாற்றம் வீசுகிறது. நுங்கம்பாக்கம்- வள்ளூவர் கோட்டம் மெயின் ரோட்டில் தேங்கி கிடக்கும் தண்ணீர் கறுப்பு கலரில் சாக்கடையாக காட்சியளிக்கிறது. மக்கள் வேறு வழியின்றி அதை கடந்து செல்கிறார்கள்.