ஜூன் மாதத்துக்குள் நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும் – தேர்தல் கமிஷன் காங்கிரசுக்கு கடிதம்
ஜூன் மாதத்துக்குள் முறைப்படி தேர்தல் நடத்தி நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் காங்கிரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
தேர்தல் கமிஷனால் அங்கீகாரம் பெற்றுள்ள அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தடவை உள்கட்சி தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என்பது விதிமுறை ஆகும்.
ஆனால், காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக முறைப்படி உள்கட்சி தேர்தல் நடைபெறவில்லை. எனவே, உள்கட்சி தேர்தலை நடத்தும்படி தேர்தல் கமிஷன் அடிக்கடி கூறி வந்தது. ஆனாலும், காங்கிரசில் தேர்தல் நடத்தவில்லை.
இந்த நிலையில் மத்திய தேர்தல் கமிஷன் காங்கிரசுக்கு உடனடியாக தேர்தல் நடத்தும்படி கெடு விதித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் கமிஷன் காங்கிரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில் ஜூன் மாதத்துக்குள் முறைப்படி தேர்தல் நடத்தி நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் விதித்துள்ள கெடு காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது சம்பந்தமாக கட்சி செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனுசிங்வி கூறியதாவது:-
தேர்தல் கமிஷன் உள்கட்சி தேர்தலை நடத்தும்படி கூறுவதில் தவறு இல்லை. ஆனால், அவர்கள் ஒரு அரசியல் கட்சிக்கு கெடு விதிப்பது சரியானது அல்ல. 6 மாதத்துக்குள் கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.
இந்த குறுகிய காலத்துக்குள் தேர்தல் நடத்தி முடிப்பது கடினமானது.
மாநில அளவில் அடிமட்டத்தில் இருந்து தேர்தல் நடத்தி மேல்மட்டம் வரை நடத்த வேண்டும். இதற்கு முன்னதாக பல்வேறு பணிகளை செய்ய வேண்டும். இவை எல்லாம் முடித்து தேர்தலை நடத்த வேண்டுமானால் டிசம்பர் மாதம் வரை ஆகிவிடும்.
எனவே, தேர்தல் கமிஷன் காலக்கெடு விதித்ததை ஏற்க முடியாது. நாங்கள் ஏற்கனவே காங்கிரஸ் காரிய கமிட்டியில் தலைவர் பதவி சம்பந்தமாக முடிவுகள் எடுத்து இருக்கிறோம். அதன்படிதான் செயல்பட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.




