இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தை குழப்பியடிக்கத் தயாராகிறது மஹிந்த அணி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை மீது எதிர்வரும் 30ஆம் திகதி முதல் மூன்று நாட்கள் விவாதம் நடைபெறவுள்ள நிலையில், குறித்த விவாதத்தையும், புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியையும் கைவிடுமாறு கோரி மஹிந்த அணியான பொது எதிரணி போராட்டம் நடத்தவுள்ளது.

விவாதம் ஆரம்பமாகும் 30ஆம் திகதி நாடாளுமன்ற நுழைவாயில் முன்பாகவே குறித்த போராட்டத்தை நடத்துவதற்கு மஹிந்த அணி திட்டமிட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பாரிய அளவிலான மக்கள் தொகையையும் அந்தப் போராட்டத்தில் களமிறக்கவும் ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன.

புதிய அரசமைப்பை உருவாக்கும் மற்றும் மறுசீரமைக்கும் செயற்பாட்டை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று கடந்த 18ஆம் திகதி மல்வத்த, அஸ்கிரிய பீடங்கள் கூட்டாக இணைந்து அறிவித்திருந்தன.

ஆட்சியாளர்கள் நாடாளுமன்றம் போன்று அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களுக்குக் கீழ்படிந்து நடப்பது ஆரம்பகாலம் தொட்டு எழுதப்படாத சட்டமாக இருந்து வருகின்றது.

மைத்திரி – ரணில் அரசை வீட்டுக்கு அனுப்ப பொது எதிரணி கடும் முயற்சிகள் எடுத்துவரும் அரசியல் களநிலையில் அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் கருத்து வெளியாகியுள்ளது. இந்நிலையில், அதை தமக்கு
சாதகமாக்கிக் கொள்ளும் நகர்வுகளிலும் பொது எதிரணி இறங்கியுள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறும் போராட்டத்தில் மஹிந்த அணியைச் சேர்ந்த முன்னாள் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், மாகாண சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர் என்று அறியமுடிகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *