யாழ்.காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினரின் படகு மோதியதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு மீனவர் படுகாயமடைந்துள்ளார்.
மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகுடன் கடற்படையின் படகு மோதிப் படகு கவிழ்ந்ததில் அதில் இருந்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய மீனவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காரைநகர் கடற்பரப்பில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், காரைநகர் வெடியரசன் வீதிப் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை கேதீஸ்வரன் (வயது – 38) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த தவராசா சத்தியராஜா படுகாயமடைந்துள்ளார்.
குறித்த இரு மீனவர்களும் நேற்றுமுன்தினம் இரவு காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது, ஒருவர் கடலில் வலையை வீசிக் கொண்டிருந்துள்ளார். மற்றயைவர் படகில் இருந்துள்ளார். அப்போது கடற்பரப்பில் வந்த கடற்படையின் படகு மோதியதில் படகு கவிழ்ந்துள்ளது.
இரண்டு மீனவர்களும் கடலுக்குள் விழுந்த நிலையில், கணபதிப்பிள்ளை கேதீஸ்வரன் உயிரிழந்துள்ளார். மற்றைய மீனவரான தவராசா சத்தியராஜா படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்தவரை, கடற்படை முகாமின் கடற்படை வைத்திய அதிகாரி, கடற்படையின் அம்புலன்ஸ் மூலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். அத்துடன் உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.