அரிசி உட்பட 9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை சதொச விற்பனை நிலையங்களில் இயன்றளவு குறைத்து விற்பனை செய்வதற்கு ஜனாதிபதி தலைமையிலான வாழ்க்கைச் செலவு உப குழு மேற்கொண்ட முடிவுக்கிணங்க அப்பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டு நேற்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுலுக்கு வருவதாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்தார்.
நாட்டில் திடீரென ஏற்பட்ட அரிசித் தட்டுப்பாட்டால் சந்தையில் அரிசியின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டது. இதனால் நாட்டில் பல பாகங்களிலும் பல எதிர்ப்புகள் வெளிவந்ததையடுத்து ஜனாதிபதியின் விசேட ஆலோசனைக்கமைய வாழ்க்கைச் செலவுக்கான உப குழு அவரின் தலைமையில் கூடி சந்தையில் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை சதொச நிறுவனத்தினூடாக நியாயமான விலையில் விற்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
நாடு முழுவதிலுமுள்ள சகல சதொச கிளைகளிலும் ஒரே விலையில் இந்தப் பொருட்கள் விற்பனை செய்யப்படுமென அவர் அறிவித்ததுடன் அவற்றுக்கான விலைகளையும் குறிப்பிட்டார்.
வொக்சோல் வீதியில் அமைந்துள்ள சதொச தலைமையகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே நிறுவனத்தின் தலைவர் அரசின் இந்தத் தீர்மானத்தை வெளியிட்டதோடு பொருட்களுக்குமான விலைகளையும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை உப குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதன் மூலம் சந்தையில் தரமான அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்யும் நிறுவனமாக சதொச நிறுவனம் விளங்குகின்றது.
இந்த நிறுவனம் மக்களின் நலன்களை மையமாகக்கொண்டே நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது” – என்றார்.
பொருட்களின் புதிய விலைகள்
வெள்ளை நாடு ரூ.74, வெள்ளைப் பச்சை அரிசி ரூ. 65, சம்பா அரிசி ரூ.84, சிவப்பு அரிசி ரூ. 75, சிவப்பு நாடு ரூ. 80, வெள்ளைச் சம்பா அரிசி ரூ. 90, சிவப்புச் சம்பா ரூ. 88, நெத்தலி (தாய்லாந்து) ரூ. 525.
இது மாத்திரமன்றி ஏனைய வெளியார் கடைகளிலும் சுப்பர் மார்க்கட்டிலும் விற்கப்படும் அநேகமான அத்தியாவசிப் பொருட்களை சதொச நிறுவனம் வெகுவாகக் குறைத்து பின்வரும் விலைகளில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக சதொச நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
பெரிய வெங்காயம் 125 ரூபா, உருளைக்கிழங்கு 130 ரூபா, டின் மீன் 400 கிராம் 130 ரூபா, லங்கா சதொச பால்மா 400 கிராம் 305 ரூபா, லங்கா சதொச பால்மா ஒரு கிலோ கிராம் 760 ரூபா, சீனி 107 ரூபா, பருப்பு 152 ரூபா, கோதுமை மா 86 ரூபா.
எதிர்வரும் மாதங்களில் பாவனையாளர்களுக்கு மேலும் பல நன்மைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தமக்கு உறுதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.