தேசிய சுதந்திர தினம் தமிழர் தாயத்தில் துக்கதினமாக அனுஷ்டிப்பு
தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்காவின் 69 ஆவது தேசிய சுதந்திர தினம் துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மக்கள் கறுப்புக்கொடிகளை ஏந்தி போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
தேசிய சுதந்திர தினத்தை தமிழ்தமிழ்தேசிய இனத்தின் துக்க தினமாக அறிவிக்கும் படிகோரி யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கும் மத்தியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் காலை நடத்தப்பட்டது.
தேசிய சுதந்திர தினத்தை தமிழ்தேசிய இனத்தின் துக்கதினமாக அறிவிக்ககோரியும், “காணாமல்போன இருபதாயிரம் பேருக்கு அரசே பதில் சொல்”, “தமிழ் அரசியல்கைதிகளை விடுதலை செய்”, “இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை விடுதலை செய்”, புதிய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்து”, “இனப்படுகொலை மற்றும் போர்குற்றங்களுக்கான நீதி விராணையை சர்வதேச நீதிபதிகளிடம் ஒப்படை”, இனப்பிரச்சினைக்கு சர்வதேச மத்தியஸ்த்ததுடன் தார்வினை காண்” ஆகிய 6 கோரிக்கைகளை முன்வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் கறுப்புபட்டி அணிந்து நடைபெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
சிங்கள அரசின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளாமல் ஜெனீவா விரைந்து தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் போனவர்களின் பெற்றோர் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தினால் வீதிப்போக்குவரத்து பாதிக்கப்படுவதாக தெரிவித்து நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்ற பொலிஸார், ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு முயற்சித்தனர். இதனால் குறித்த பகுதியில் சிறிதுநேரம் அமைதியின்மை ஏற்பட்டது.
எனினும் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் அருகில் நின்றவாறு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தனர்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பிரதேச மக்கள் கறுப்பு கொடிகளை ஏந்தியவண்ணம் பேரணியாக சென்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
காலியில் சுதந்திரதினம் வீதியில் நாம், விடுதலை எமக்கு எப்போது?, எமது மண்ணை ஆக்கிரமித்து நம்மை வீதியில் அலையவிட்டு நல்லிணக்கம் பேசுதல் முறையா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை பேரணியில் ஈடுபட்ட மக்கள் ஏந்தியிருந்தனர்.




