மதுரை: அதிமுக அரசை ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டோம் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆவேசமாக தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் தினகரன் இன்று இரவு அளித்த பரபரப்பு பேட்டியின் விவரம்:
துரோகம், சுயநலம் உள்ளவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. இது அம்மாவின் ஆட்சியல்ல, எடப்பாடி பழனிச்சாமியின் துரோக ஆட்சி. இந்த மக்கள் விரோத ஆட்சியை மாற்றவும் நாங்கள் தயாராகிவிட்டோம்.
தர்ம யுத்தம் என்று கூறிக்கொண்டு துணை முதல்வர் பதவியை பெற்றவர் பன்னீர்செல்வம். பதவி இல்லையென்றால் பன்னீர்செல்வத்திற்கு தூக்கமே வராது. பொதுமக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தி வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நீடிப்பது தமிழகத்திற்கு நல்லதில்லை.
முதல்வரை மாற்ற நாங்கள் தயாராகிவிட்டோம். எடப்பாடி பழனிச்சாமியை மாற்றுவோம் அல்லது இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துவிட்டோம். தலையை கிள்ள முயற்சிப்போம்; இல்லையென்றால் ஆட்சியை தூக்கி எறிவோம். இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.
நாளை அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி-ஓபிஎஸ் அணிகள் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், கோபத்திலுள்ள தினகரன் இவ்வாறு பேட்டியளித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
https://www.youtube.com/watch?v=lw1Y3_7Sgow