நாட்டிற்குள் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும் ஜனநாயக ரீதியான திருத்தங்களை மேற்கொள்வதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் மிகவும் பாராட்டத்தக்கவை என அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்க செயலாளர் ஹெலிஸ் வேல்ஸ் தெரிவித்துள்ளார்.
விமர்சனங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதி எடுத்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் உதவி தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நீதி, நியாயம், அரசியலமைப்புத் திருத்தம் என அனைத்து துறைகளிலும் இலங்கை தற்போது முன்னேற்றத்தை பெற்றுள்ளது. விரைவில் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் அதிகரிக்கப்படும். எனவும் அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, நல்லிணக்க வேலைத்திட்டத்தின் முடிவுகள் வேகமாக கிடைக்கவில்லை என்ற போதிலும் அது நிரந்த நோக்கத்தை நோக்கி முன்னோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.