Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கடன் பொறியில் இருந்து நாடு காப்பற்றப்பட்டுள்ளது

கடன் பொறியில் இருந்து நாடு காப்பற்றப்பட்டுள்ளது

கடந்த இரண்டு வருடங்களில் கடன் பொறியில் இருந்து நாட்டை காப்பாற்றியதாகவும், அடுத்த இரண்டு வருடங்களில் கடனை திரும்ப செலுத்துவதற்காக நிரந்தரமான வேலைத்திட்டத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடனை திரும்ப செலுத்துவதற்கு தேவையான வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீட்டுக்கடனை வழங்குவதற்காக அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 1,100 குடும்பங்களுக்கு 4.2 மில்லியன் நிதி வழங்கப்பட்டது. வீடுகள் இல்லாத குடும்பங்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபர அறிக்கையும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், மக்களின் வயிற்றில் அடிக்காது அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடிந்தது.

உணவு, எரிபொருள், அத்தியவசிய பொருட்களின் விலைகளை குறைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை குறிப்பிடத்தக்களவு அதிகரித்த ஒரே அரசாங்கம் தற்போதைய அரசாங்கமாகும்.

பெற்ற கடனை திரும்ப செலுத்தும் அளவுக்கு இலங்கை இன்னும் வலுவடையவில்லை.

எனினும் சர்வதேச சமூகத்துடன் சிறந்த தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டதன் மூலம் நல்ல வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடிந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு பூர்த்தியாகும் போது இதன் பலாபலன்கள் கிடைக்க ஆரம்பிக்கும்.

அடுத்த மாதம் மக்களுக்கு மேலும் பல வரிச்சலுகைகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …