சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட, பிரபல சீக்கிய சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

பாலியல் வழக்கில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் குற்றவாளி என, கடந்த இரு தினங்களுக்கு முன்னர், பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. இதனை அடுத்து, அவர் ரோதக் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கியதால், அரியானா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கலவரம் வெடித்தது. பஞ்ச்குலா, சிஸ்ரா பகுதிகளில் நிகழ்ந்த வன்முறைகளில் 38 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், சாமியார் குர்மித்திற்கான தண்டனை, இன்று அறிவிக்கப்படவுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரோதக் சிறைச் சாலையிலேயே, தற்காலிக நீதிமன்றம் அமைக்க, பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ரோதக் பகுதியிலும், குர்மித் ஆசிரமம் அமைந்துள்ள சிர்சா பகுதியிலும் ஆயிரக்கணக்கான துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
வரும் 29-ம் தேதி வரை, இப்பகுதிகளில் மொபைல் போன், மற்றும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

அம்பாலா, சிர்சா, பானிபட் உட்பட பதற்றமான இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாமியார் அடைக்கப்பட்டுள்ள சிறை அமைந்திருக்கும் ரோதக் நகரில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சாமியார் குர்மித் வழக்கில் இன்று தண்டனை அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரியானாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாபில் 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இன்று சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்தார். இதனை கேட்டதும் ராம் ரஹீம் கண்ணீர் வடித்ததாக தகவல் கூறுகின்றது.

இந்நிலையில், தண்டனை அறிவித்த சில நிமிடங்களில் ராம் ரஹீமுக்கு ஆதரவாக அரியானா மற்றும் பஞ்சாபில் கலவரம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=n9wDpCD1-ZM

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *