ஒரு தலை குல்லாவா?:தமிழிசை கேள்வி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழக அரசியல் தொடர்பாக அடிக்கடி ட்விட்டரில் கருத்து பதிவிடுவது நடிகர் கமல்ஹாசனின் வழக்கம். அதிமுக அணிகள் நேற்று இணைந்த போது ட்விட்டரில் பதிவிட்டிருந்த கமல்ஹசான், “காந்திக்குல்லா! காவிக்குல்லா! கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில். போதுமா? இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ட்விட்டரில் கமல்ஹாசனை மறைமுகமாக சாடியுள்ள தமிழிசை சவுந்தரராஜன், “காந்தி குல்லாவையும் காவி குல்லாவையும் முந்திக் கொண்டு அவசரமாக போட்டவர்கள் முத்தலாக் தீர்ப்பு பற்றி விஸ்வரூப அமைதி????? ஒரு தலை குல்லாவா?” எனத் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் கமல்ஹாசன் பெயரை குறிப்பிடாமல் தமிழிசை இந்த பதிவை போட்டுள்ளார்.

முத்தலாக் முறை சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது. மேலும், முத்தலாக் நடைமுறையில் தலையிட விரும்பவில்லை என்று அதிரடியாக தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் நாடாளுமன்றமே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. அனைத்துக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து ஆறு மாதத்திற்குள் முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றம் முடிவு செய்து கொள்ளவும், அதுவரை மும்முறை தலாக் கூறி விவகாரத்து செய்யும் முறைக்கு தடைவிதிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில் கமல்ஹாசனுக்கு தமிழிசை மறைமுகமாக இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *