கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சிக்கு இழுக்க கோடிக்கணக்கில் பணத்தையும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளை வழங்கவும் அரசாங்கம் தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க அரசாங்கத்திற்கு எங்கிருந்து கோடிக்கணக்கில் பணம் கிடைத்து என கேள்வி எழுப்பியுள்ள அவர், பிணை முறிப்பத்திர மோசடியில் கிடைத்த பணமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது எனவும் கூறியுள்ளார்.
உடுகம்பலையில் உள்ள தனது வீட்டில் மினுவங்கொடை தொகுதியின் கல்விசார் ஊழியர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் பிரசன்ன ரணதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வாலில் சுதந்திரக் கட்சியை கட்டி இந்த கூட்டு அரசாங்கத்தின் பயணம் ஆரம்பிக்கப்படும் போது, இந்த பயணம் தொடராது என நாங்கள் கூறினோம். நாங்கள் அன்று கூறியது தற்போது உண்மையாகி வருகிறது.
கூட்டு அரசாங்கம் நன்றாக குழம்பிய அரசாங்கமாக மாறியுள்ளது. தற்போது அரசாங்கத்தின் இறுதி இரண்டு மூன்று மாதங்கள் கடந்து வருகின்றன எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.