புதிய அரசமைப்பிற்கே முதலிடம்: ஜனாதிபதி
நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த கலந்துரையாடல் கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக கலந்தாய்வுச் செயலணியின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் கொண்ட நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி நாடு முழுவதிலும் கலந்தாலோசனைகளை நடத்தி அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது.
கலப்பு விசாரணைப் பரிந்துரையை உள்ளடக்கிய இந்த அறிக்கையை சிறிலங்கா ஜனாதிபதியிடம் நேரடியாக சமர்ப்பிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கடந்த மாதம் 3 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் கலந்தாய்வு செயலணியின் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து தமது அறிக்கை தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
கலந்தாய்வு செயலணியின் அறிக்கை தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது நிலைமாறுகால நீதிக்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பில் நிலைமாறு கால நீதிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அதற்கு அனைத்து சமூகங்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் தேவை இருப்பதாகவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.




