“வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் தனது பதவியிலிருந்து விலக மறுத்திருப்பதும், கட்சி தனக்கு முக்கியமல்ல என்று தெரிவத்திருப்பதும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது” என்று ரெலோ அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண அமைச்சரவைக் குழப்பங்களைத் தொடர்ந்து அமைச்சர் டெனீஸ்வரனை பதவியிலிருந்து விலகுமாறு கட்சி கேட்டுக்கொண்டது. ஆனால், அவர் மறுத்துவிட்டார். அதனையடுத்து அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். அப்போதும் பதவி விலகுமாறு வற்புறுத்தப்பட்டார். ஆனால், அமைச்சர் அதற்கும் மறுத்துவிட்டார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கவலை தெரிவித்தார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் இதுபற்றி இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தச் சர்ச்சைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.