வடக்கில் பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களுக்கு பிரதான காரணம் மொழிப்பிரச்சினையே என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
அங்கு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அண்மைக் காலங்களில் பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிராக யாழில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் மொழிப்பிரச்சினை காரணமாகவே இடம்பெற்றுள்ளன.
ஏனெனில் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான தொடர்பாடல் மொழிப்பிரச்சினை காரணமாக தடைப்படுகின்றது. இதன் காரணமாக தேவையற்ற பல குழப்பங்கள் தோற்றம் பெறுகின்றன.
எமது இளைஞர்கள் பொலிஸ்துறையில் சேவையாற்ற முன்வரவேண்டும். இதனால் இரு இனங்களுக்கும் இடையிலான இடைவெளி குறைக்கப்பட்டு பல முரண்டபாடுகள் இல்லாதொழிக்கப்படும்” என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.