அமெரிக்க தீவை நோக்கி செலுத்தும் வடகொரியாவின் ஏவுகணைகளை சட்டப்படி இடைமறிக்க முடியும் என்று ஜப்பான் நாட்டின் ராணுவ மந்திரி ஒனோடெரா கூறினார்.
அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவின் மீது 4 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தப்போவதாக வடகொரியா விடுத்துள்ள மிரட்டல், உலக அரங்கை அதிர வைத்துள்ளது.
அடுத்த சில தினங்களில் இதற்கான திட்டத்தை வடகொரியா இறுதி செய்யப்போவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. வடகொரியாவின் ‘வாசோங்-12’ ஏவுகணைகள், ஜப்பானின் மீது பறந்து சென்று குவாம் தீவுக்கு அருகே 30 கி.மீ. தொலைவில் கடலில் விழும் என தெரிகிறது.
குறிப்பாக ஜப்பானின் ஷிமானே, ஹிரோஷிமா, கொய்ச்சி மாகாணங்களின் மீது அந்த ஏவுகணைகள் பறந்து செல்லும்.
குவாமை குறி வைத்து வடகொரியா ஏவுகணைகளை ஏவினால், அந்த ஏவுகணைகளை சட்டப்படி இடைமறிக்க முடியும் என்று ஜப்பான் நாட்டின் ராணுவ மந்திரி ஒனோடெரா கூறினார்.
இது தொடர்பாக அவர் ஜப்பான் பாராளுமன்றத்தின் கீழ்சபை குழுவில் பேசும்போது, “அமெரிக்காவின் பசிபிக் பகுதி நோக்கி ஏவுகணை செலுத்தினால், அதைத் தாக்குவதற்கு ஜப்பான் அனுமதிக்கப்பட வேண்டும். இதுதான் ஜப்பான் அரசின் நிலைப்பாடு” என்று குறிப்பிட்டார்.
ஆனால் குவாம் தீவு மீது செலுத்தப்படுகிற ஏவுகணையை சுட்டுத்தள்ளும் திறன், ஜப்பானிடம் தற்போது இல்லை என்று வல்லுனர்கள் கூறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.