வடக்கு மாகாண சுகாதா அமைச்சர் ப.சத்தியலிங்கம் பதவி விலகியுள்ளார். அரசியல் உள்நோக்கத்துடனேயே அமைச்சரவையிலிருந்து தன்னை வெளியேற்ற வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துள்ளார் என்பதைத் தன்னால் புரிந்துகொள்ள முடிவதால் அவருக்குக் கீழ் ஓர் அமைச்சராக இருக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
“கட்சியின் தீர்மானத்துக்கு கட்டுப்பட்டு நான் எனது பதவியிலிருந்து விலகுகின்றேன்” என்று தெரிவித்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது. மாற்றியமைக்கப்படும் வடக்கு மாகாண அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்று அதில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவி விலகல் கடிதத்தை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
“அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழு தனது இறுதி அறிக்கையில் என்னை விடுவித்திருந்ததுடன், எனது அமைச்சின் செயற்திட்டங்களுக்கு மாகாணசபை முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தது. ஆனால், என் மீது மீள்விசாரணை நடத்தப்படும் என்றும் கட்டாயவிடுப்பில் செல்லுமாறும் கூறியிருந்தீர்கள்.
மீள அமைக்கப்படும் விசாரணைக்குழு நீதியானதாகவும், சட்டரீதியானதாகவும் இருந்தால் நான் மீண்டும் விசாரணைக்குத் தயாராக இருந்தேன்.
கடந்த 5ஆம் திகதி (சனிக்கிழமை) தங்கள் அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் நடந்த சந்திப்பில், அமைச்சரவையிலிருந்து என்னை வெளியேற்ற வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளீர்கள். அதில் நீங்கள் பிடிவாதமாக இருந்துள்ளீர்கள்.
அமைச்சர் சபையிலிருந்து என்னை வெளியேற்றுவதில் நீங்கள் கொண்டிருந்த உறுதியான நிலைப்பாடானது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை என்னால் புரியக்கூடியதாக இருந்தது. இவ்வாறான நிலையில் தங்களுடன் இணைந்து தொடர்ந்தும் கடமையாற்றுவது சிந்திக்க வேண்டிய விடயமாக இருந்தது.
இதன் பின்பு, தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் கூடிப் பேசியபோது, மாற்றியமைக்கப்படும் அமைச்சரவையில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் எவரும் இருப்பதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டது. இவற்றுக்கு அமைவாகவே எனது பதவி விலகல் கடிதத்தை தங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்” – என்றுள்ளது.