அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஒருநாள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழியர்களின் மாதாந்தக் கொடுப்பனவு, ஓய்வூதியம், சம்பள முரண்பாடு போன்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கோரி, நாடாளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப் பணிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்கச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் கல்விசாரா ஊழியர்கள் கடந்த வருடம் ஜூலை மாதம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கிய வாக்குறுதியை தொடர்ந்து, அப்போதைய பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டிருந்தது.
இதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி, 2017 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்ட நிதியில் 460 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிதி இந்தவருடம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இதுவரை குறித்த விடுவிக்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாகவே அனைத்துப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மீண்டும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு கிடைக்காத பட்சத்தில், நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களும் தொடர்ச்சியான பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் குதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தின் அழைப்பின் பேரில் குறித்த பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட அதேவேளை, கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் ஒலுவில் வளாகத்தில் கூடி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.