தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்: ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கவுள்ள மாவை
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வடமாகாண வேலையற்ற பட்டதாரி மாணவர்கள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் காலவரையற்ற போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்களின் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) ஐந்தாவது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதிக்கு நேரில் சென்றஇலங்கை தமிழரசுக் கட்சி தலைவர், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மாணவர்களின் பிரச்சினை குறித்து வட மாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரேயுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினோம். அதற்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஜனாதிபதி யாழ் வரும் பட்சத்தில், அவரை நேரில் சந்தித்து இப்பிரச்சினை குறித்து அழுத்தம் கொடுக்க எதிர்ப்பார்த்துள்ளேன். இந்த போராட்டமானது நியாயமானது. இதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.




