விட்டுக்கொடுப்பு இல்லாவிடின் 30 வருட துன்பம் தொடரும்
நாட்டில் வாழும் அனைவரும் பெரும்பான்மை, சிறுபான்மை என்று சிந்திக்காமல் சகலரும் சமத்துவமானவர்கள் எனக் கருதி, விட்டுக் கொடுப்புடன் வாழ முடியாவிட்டால் துன்பம் தொடரும் என கல்முனை ஸ்ரீசுபத்திராம மகா விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அன்பையும், ஆதரவையும், கண்ணியத்தையும் வழங்க மறந்தால் கடந்த 30 வருட கால பகைமை உணர்வு இன்னமும் நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முள்ளந்தண்டு வலி, பார்வைக் குறைபாடு உட்பட நோய்களுக்கான இலவச சிகிச்சை முகாமும் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மஹாஜன கல்லூரியில் இடம்பெற்ற போது, இந்த நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வழமையாக எந்தவொரு நிகழ்வுகளிலும் பௌத்த மதத் தலைவருக்குத்தான் முன்னுரிமையளித்து உரையாற்றச் சொல்வார்கள்.
சிறுபான்மை, பெரும்பான்மை என்று யாருமே சிந்திக்கக் கூடாது என்றும் சிறந்ததொரு மனிதர்களாக மாறுவதோடு, மற்றவர்களையும் அவ்வாறே மாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழர், முஸ்லிம் என்று பிரித்துப் பாரக்க்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், அரச அதிகாரிகள் கருணையுள்ளத்தோடு பணிபுரிய வேண்டும் என்றும் இந்த நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
எமது பண்பாடுகளை, விழுமியங்களை, மதத்தலைவர்கள் சொல்வதை விட வேறு யாரோ கூறுவதை, மக்கள் நம்பக்கூடிய காலமாக இது மாறி விட்டதாகக் குறிப்பிட்ட அவர், மதத் தலைவர்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புத்த பெருமான் எந்த வேளையிலும் தன்னை ஒரு பெரிய மனிதனாகக் காட்டிக் கொண்டு, பெருமை பாராட்டவில்லை என்றும் இந்த நாட்டு மக்கள் உடலாலும் உள்ளத்தாலும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லிணக்கம், ஒற்றுமை, சமாதானம், சமத்துவம், சகவாழ்வு போன்றவற்றை உருவாக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளமை உண்மையில் சிறந்ததொரு அழைப்பு என்றும் அதனை ஏற்றுக்கொண்டு சமாதானத்திற்காகப் பாடுபடுவோம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




