ஆசிரியர் வெற்றிடங்கள்: அவசரக் கலந்துரையாடல்
கிழக்கு மாகாணத்திலுள்ள 4703 அதிபர் மற்றும் ஆசிரியர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவது தொடர்பான அவசரக் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் எதிர்வரும் சில நாட்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சான தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்த்தின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
குறித்த கூட்டத்தில் பங்கேற்க கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ் தண்டாயுதபானி, தேசிய கல்வி அமைச்சின் செயலாளர், ஆளுனர் செயலாளர், தலைமை செயலாளர், மாகாண கல்வியமைச்சின் செயலாளர், மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது மாகாணத்தில் உள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழி மூலமாக 2 ஆயிரத்து 727 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கும் சிங்கள மொழி மூலமாக 1371 வெற்றிடங்களுக்கும் பட்டதாரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய புதிய நியமனங்கள் மற்றும் தேசிய தொழில்வாய்ப்புக்களுக்கான நிதி திறைசேரி மூலமே வழங்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.




