வட, கிழக்கில் தேர்தலின் பின் விசேட பொருளாதார பொறிமுறையை உருவாக்க உள்ளோம் – சுமந்திரன்
வடக்கு, கிழக்கு மக்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தும் நோக்கில் விசேட பொருளாதார பொறிமுறை திட்டம் ஒன்றை பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்க்கான எமது அழுத்தங்களும் நகர்வுகளும் தொடரும் அதேவேளை, அதற்கு சமாந்தரமாக மக்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தவும் விசேட செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அரசியல் தீர்வு, தமிழ் மக்களின் அடிப்படைப்பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் தேர்தலின் பின்னர் ஆட்சிக்கு வரும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருக்கின்றோம்.
அரசியல்தீர்வு குறித்து எமது நிலைப்பாட்டை நாங்கள் வெளிப்படையாகவே கூறி வருகின்றோம். மேலும் ஆட்சி நடத்தும் அரசாங்கம் எம்முடன் பேசும் என்று எதிர்பார்க்கின்றோம். வடக்கு, கிழக்கு மக்களின் ஆணையைப்பெற்று பாராளுமன்றுக்கு தெரிவாகின்ற எம்முடன் ஆட்சியமைக்கப்போகின்ற தரப்பினர் பேச்சு நடத்தாமல் தவிர்க்க முடியாது.
அரசியல்தீர்வு எவ்வளவு முக்கியமோ அதேபோன்று பொருளாதார விடிவும் மக்களுக்கு முக்கியமானது என்றார்.
பயனுள்ள இணைப்புகள் இங்கே




