புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவுக்கு அமைவாக, தீர்ப்பாயத்தால் நடத்தப்பட்ட மூல வழக்கேடுகள் மற்றும் அதன் பிரதிகள் உயர் நீதிமன்றில் நேற்றுக் கையளிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன் மற்றும் உத்தியோகத்தர்கள் நேரில் சென்று வழக்கு ஆவணங்களை உயர் நீதிமன்றப் பிரதிப் பதிவாளர் சட்டத்தரணி கிரிஷானி டி கோத்தகொடயிடம் நேற்றுக் கையளித்தனர்.
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வின் பின் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தப் படுகொலை வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய சிறப்புத் தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) விசாரணைகளை மேற்கொண்டது.
விசாரணைகளின் நிறைவில் கடந்த செப்ரெம்பர் 28ஆம் திகதி 9 எதிரிகளில் 7 பேர் கொலைக் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. கூட்டு வன்புணர்வு மற்றும் சதித்திட்டம் தீட்டியமை ஆகிய குற்றங்களுக்கு 7 குற்றவாளிகளுக்கும் 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. 2 பேர் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர்.