தேர்தலில் மருமகனுக்கு மட்டும் பிரசாரம் செய்ய ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் லல்லுபிரசாத் முடிவு
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் மருமகனுக்கு மட்டும் பிரசாரம் செய்ய ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் லல்லுபிரசாத் முடிவு செய்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் வருகிற 11-ந் தேதி தொடங்கி 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு உச்சக்கட்ட பிரசாரம் நடந்து வருகிறது.
பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் தனது 4-வது மகள் ராகினியை முலாயம்சிங் யாதவின் குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்து இருக்கிறார்.
முலாயம்சிங்கின் குடும்பத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வான ஜிதேந்திர யாதவின் மகன் ராகுல் யாதவ் ராகினியை திருமணம் செய்து இருக்கிறார்.
தற்போது நடந்து வரும் சட்டசபை தேர்தலில் ராகுல் யாதவ் சிக்கந்தராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவருக்காக லல்லு பிரசாத் நேரடியாக சென்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இது சம்பந்தமாக லல்லுபிரசாத் யாதவ் கூறும் போது, புதன் கிழமை நான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். 3 கூட்டங்களில் பேச இருக்கிறேன் என்று கூறி இருந்தார்.
ஆனாலும், அவருடைய பிரசாரம் சம்பந்தமாக சமாஜ்வாடி தலைவரும், உத்தரபிரதேச முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் இன்னும் உறுதி செய்து முடிவை அறிவிக்கவில்லை. அந்த அறிவிப்பு வந்ததும் லல்லுபிரசாத் யாதவ் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
காங்கிரஸ்- சமாஜ்வாடி கூட்டணி வருவதற்கு லல்லுபிரசாத் முக்கிய காரணமாக இருந்தார். எனவே, லல்லுபிரசாத் மாநிலம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவார் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த திட்டத்தை கைவிட்டுள்ள லல்லுபிரசாத் மருமகனுக்காக மட்டும் பிரசாரம் செய்ய முடிவு செய்து இருக்கிறார்.




