Monday , June 30 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு குறித்து ஜனாதிபதி – கூட்டமைப்பு பேச்சு! – இராணுவம் வெளியேற ரூ.15 கோடி அமைச்சரவை அங்கீகாரம்

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு குறித்து ஜனாதிபதி – கூட்டமைப்பு பேச்சு! – இராணுவம் வெளியேற ரூ.15 கோடி அமைச்சரவை அங்கீகாரம்

கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்குழு நேற்று ஜனாதிபதி தலைமையிலான அரசுத் தரப்புடன் பேச்சுக்களில் ஈடுபட்டது.
கேப்பாபிலவுக் காணிகளை விடுவிப்பதற்காக இராணுவத்தினருக்கு 14 கோடி 80 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு நேற்று மாலை 4.30 மணி தொடக்கம் சுமார் ஒரு மணி நேரம் நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள ஜனாதி ப தி யி ன் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதியுடன் இராணுவத் தளபதி மற்றும் முல்லைத்தீவு, யாழ். படைகளின் தளபதிகளும் இந்தச் சந்திப்பில் பங்குபற்றினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நேற்றைய சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சுகவீனம் காரணமாகப் பங்குபற்றவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களான  மாவை சேனாதிராஜாவும், எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டனர்.
கேப்பாப்பிலவில் 111 ஏக்கர் காணிகளை விடுவித்து, புதிய இடத்தில் கட்டடங்கள் அமைத்து இடம்பெயர்வதற்காக இராணுவம் கோரிய 14 கோடி 80 இலட்சம் ரூபா நிதியை வழங்குவதற்கு நேற்றுக் காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நிதி வழங்கப்பட்டு விட்டதால் 111 ஏக்கர் காணியிலிருந்து அடுத்த ஆறு மாதத்துக்குள் – இயன்ற விரைவில் படைகள் விலக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
அதற்கு மேலும் அதிகளவில் காணிகள் விடுவிக்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
கேப்பாபிலவில் எஞ்சியிருக்கும் 70 ஏக்கர் காணியில் அருகில் நந்திக் கடலில் மின்பிடித் தொழில் செய்வதற்கு இடமளிக்கும் விதத்தில் சில பிரதேசங்களை இப்போதைக்கு விட்டுத் தரவும் படைத் தரப்பில் உறுதி கூறப்பட்டது.
இதுபோல மயிலிட்டி உட்பட வெவ்வேறு இடங்களிலும் காணி விடுவிப்பு இடம்பெறும் எனவும் தளபதிகள் தெரிவித்தனர்.
மயிலிட்டியிலும் நந்திக் கடல் பகுதியிலும் கடற்றொழில் செய்வோருக்கு வாழ்வாதார உதவிகளை ஜனாதிபதிக்குக் கீழ் இருக்கும் தேசிய நல்லிணக்க அமைச்சு ஊடாக வழங்குவது பற்றியும் நேற்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது என அறியவந்தது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …