Saturday , August 23 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வாக்குகளுக்காக அரசியல்வாதிகள் சுயநலம்; அதுவே அனர்த்தங்களுக்கு முக்கிய காரணம்! – சீறுகின்றார் மைத்திரி

வாக்குகளுக்காக அரசியல்வாதிகள் சுயநலம்; அதுவே அனர்த்தங்களுக்கு முக்கிய காரணம்! – சீறுகின்றார் மைத்திரி

“அரசியல்வாதிகள் அபிவிருத்திக்குப் பதிலாக விருப்பு வாக்குகளை எதிர்பார்த்துச் செயற்படுவதனாலேயே வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு மக்கள் முகங்கொடுக்கவேண்டியிருக்கின்றது.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அபிவிருத்தி செயற்பாடுகளின்போது அரசு விதந்துரைக்கும் திட்டங்களை அமுல்படுத்த இடமளிக்காமல் அடுத்த தேர்தலுக்காக மக்களை வெற்றிகொள்வதற்கு அரசியல்வாதிகள் சிலர் செயற்படுவதன் காரணமாக இவ்வாறான அழிவுகளுக்கு மக்கள் முகங்கொடுக்கவேண்டியிருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான கசப்பான அனுபவங்களுக்கு பின்னராவது மக்களுக்கு உண்மை நிலையைப் புரியவைத்து அரசின் அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அனைத்து அரசியல்வாதிகளும் தமது ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

காலி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இரத்தினபுரி, களுத்துறை, காலி மாவட்டங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பல வருடங்களுக்கு முன்னர் சாத்திய வள ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றை அமுல்படுத்துவதற்கு அனைத்து அரசுகளும் முயற்சியெடுத்தபோதிலும் சில அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக அந்தச் செயற்பாடுகள் தடைப்பட்டன.

நாட்டில் ஏற்பட்ட திடீர் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊடக நிறுவனங்கள், கொடையாளர்கள் மற்றும் தொண்டர் அமைப்புகளுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்” – என்றார்.

காலி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி, நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு தொடர்ச்சியாக உதவித் திட்டங்களை அமுல்படுத்துமாறும் ஆலோசனை வழங்கினார்.

மக்கள் அதிக நாட்கள் முகாம்களில் தங்கியிருக்க முடியாது என்பதனால் அவர்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறும், உதவிச் செயற்பாடுகளின் முன்னுரிமையை இனங்கண்டு செயற்படுமாறும் அலுவலர்களிடம் தெரிவித்தார்.

வெள்ளம் வடிந்த பின்னர் கிணறுகளைத் துப்பரவு செய்வதற்கான நீர்ப்பம்பிகளை அரசால் வழங்குமாறும், மக்களுக்குத் தேவையான மருந்துப்பொருட்களை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடாக இலவசமாக வழங்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

மக்களுக்குத் தேவையான உலர் உணவு உள்ளிட்ட பொருட்களைப் பகிர்ந்தளிக்கும்போது அரசியல்வாதிகளை இணைத்துக்கொள்ளாமல், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அலுவலர்கள் ஊடாக அந்தச் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டார்.

மாவட்ட வீதிகள், பாடசாலை மற்றும் மருத்துவமனைகளில் விரைவாக மேற்கொள்ளக்கூடிய திருத்தவேலைகள் தொடர்பான அறிக்கையை வழங்குமாறும், பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளைப் புனரமைக்கும் செயற்பாடுகளை முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.

அமைச்சர்களான வஜிர அபேவர்தன, கயந்த கருணாதிலக்க, சந்திம வீரக்கொடி, பிரதி அமைச்சர்களான மனுஷ நாணயக்கார, நிஷாந்த முத்துஹெட்டிகம, தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா, காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், காலி மாவட்ட செயலாளர் எஸ்.டி.கொடிக்கார உள்ளிட்ட அரச அலுவலர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலுக்கு முன்னதாக அனர்த்த நிவாரண சேவை அலுவலர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அவர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்பை பாராட்டினார்.

அதன்பின்னர் காலி மாவட்ட மக்களுக்காக ஏனைய மாவட்டங்களிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களை உத்தியோகபூர்வமாக காலி மாவட்ட செயலாளரிடம் ஜனாதிபதி ஒப்படைத்தார்.

பாதிக்கப்பட்ட தமது சகோதர மக்களுக்காக பொலனறுவை, அநுராதபுரம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மன்னார், மொனராகலை, குருநாகல், புத்தளம், மாத்தளை, கண்டி, கேகாலை, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்கள் தமது பொறுப்பை நிறைவேற்றியதற்காக ஜனாதிபதி தனது நன்றியைக் கூறினார்.

அதேவேளை, நாட்டு மக்கள் அனர்த்தத்துக்குள்ளானபோது அவர்களுக்கு பலமூட்டி வெளிநாடுகள் வழங்கிய நிதி மற்றும் பொருள் ரீதியான உதவிகளுக்காகவும் இலங்கை அரசின் சார்பில் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …