ரெசிடென்சியல் கல்லூரிகளில், திருமணமாகாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் – அரசின் அறிவிப்பு
தெலுங்கானாவில் உள்ள ரெசிடென்சியல் கல்லூரிகளில், திருமணமாகாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அரசின் அறிவிப்பு பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள 23 ரெசிடென்சியல் கல்லூரிகளில் மொத்தம் 4000 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவிகளுக்கு கல்வி முதல் உணவு வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கல்லூரி கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பொன்றில் ‘‘திருமணமாகாத பெண்களிடமிருந்து பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம் ஆகிய படிப்புகளில் சேர 2017-2018-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன” எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி கூட்டமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “திருமணம் ஆன பெண்களின் கணவர்கள் கல்லூரிக்கு வந்தால் பிற மாணவிகளின் கவனம் சிதறும் என்பதால் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். ஆனால், திருமணமான பெண்கள் விண்ணப்பித்தால் அதனைத் தடுக்க மாட்டோம்” என்றார்.
இந்த அறிவிப்பு தெலுங்கானா மாநிலம் முழுவதும் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




