வடக்கு.கிழக்கு மாகாணங்கள் பிரிந்துதான் இருக்க வேண்டும் – அப்துல் சஜீர் முகமட் சபீர்
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எப்போதும் பிரிந்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவன சம்மேளனம் இருப்பதாக அந்த அமைப்பின்
பொதுச் செயலாளர் அப்துல் சஜீர் முகமட் சபீர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டிருந்தபோது, முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட சகப்பான சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டே தாம் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் பேரவைக்கும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்திற்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு தாண்டவன் வெளியில் உள்ள கூட்டுறவு சங்க மண்டபத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை முன்வைத்துள்ள முன்மொழிவுகளில் முஸ்லிம்கள் விடயத்தில் இடைவெளி காணப்படுவதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவன சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அப்துல் சஜீர் முகமட் சபீர் ஐ.பி.சி தமிழ் செய்திக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.