சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க போவதில்லை: ஜனாதிபதி மீண்டும் உறுதி
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார்.
கொழும்பு மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபை மற்றும் அகில இலங்கை செயற்குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த ஜனாதிபதி, கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளில் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இது குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றின் மூலமும் கேள்வி எழுந்தியிருந்தார். அதன்படி குறித்த அறிக்கை வெளியாகி 24 மணிநேரத்திற்குள் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க மாட்டேன் என பதில் வழங்கினேன்.
அதேவேளை, மக்களின் நலனுக்காக சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் நீதியான சமூகத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த நாம் தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.




