Tuesday , June 3 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மைத்திரி – யுத்தத்தில் மரணித்த அனைவரும் தோல்வியுற்றவர்களாகவோ அல்லது உயிர் வாழ்கின்ற அனைவரும் வெற்றி பெற்றவர்கள் அர்த்தமாகாது

மைத்திரி – யுத்தத்தில் மரணித்த அனைவரும் தோல்வியுற்றவர்களாகவோ அல்லது உயிர் வாழ்கின்ற அனைவரும் வெற்றி பெற்றவர்கள் அர்த்தமாகாது

மைத்திரி – யுத்தத்தில் மரணித்த அனைவரும் தோல்வியுற்றவர்களாகவோ அல்லது உயிர் வாழ்கின்ற அனைவரும் வெற்றி பெற்றவர்கள் அர்த்தமாகாது

முப்பது வருடகால யுத்தத்தில் மரணித்த அனைவரும் தோல்வியுற்றவர்களாகவோ அல்லது உயிர் வாழ்கின்ற அனைவரும் வெற்றி பெற்றவர்கள் அர்த்தமாகாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அத்துடன், பொருளாதார விடுதலையை நோக்கியே நாம் தீர்மானத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுகிறோம். இதனாலேயே 2017ஆம் ஆண்டினை நாம் வறுமையை இல்லாதொழிக்கும் வருடமாக பிரகடனப்படுத்தியுள்ளோம். சர்வதேச ஆதரவையும், நன்மதிப்பையும் பெற்று நாம் முன்நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றும் கூறினார்.
தேசிய ஒற்றுமை எனும் தொனிப்பொருளில் இன்று நடைபெற்ற இலங்கையின் 69ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

இன்று நாம் ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்று 69 வருடங்கள் நிறைவடைகின்றன. 69ஆவது தேசிய சுதந்திர தின விழாவை மிகவும் சிறப்பாகவும் கீர்த்தியுடனும் நடத்தக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் சுதந்திரத்தின் உண்மையான அர்த்தம் பற்றி கூறுவது முக்கியம் என்று நான் நம்புகிறேன். பல்வேறு நாடுகளில் வாழும் உலகின் பல்வேறு இனங்கள் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மொழிகளைப் பேசுகின்றனர். அந்த அனைத்து மொழிகளிலும் சுதந்திரம் என்ற சொல் ஒரு சிறப்புவாய்ந்த சொல்லாகும்.

1505 முதல் 1948 வரை எமது நாடு அந்நிய ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்த காலப்பகுதியில் நாம் பேசிய சுதந்திரம் என்ற வார்த்தைக்கும் இன்று நாம் பேசும் சுதந்திரம் என்ற வார்த்தைக்கும் இடையே பல வேறுபாடுகள் இருப்பதை நாம் அறிவோம்.

அன்று 1948 இல் டீ.எஸ்.சேனாநாயக்க முதல் இன்றைய தேசிய தலைவர்கள் வரை சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தேசிய சுதந்திரப் போராட்டத்திற்காக முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் எமது தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. 1505 முதல் 1948 வரையான காலப்பகுதியில் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக ஆயிரக் கணக்கான உயிர்த் தியாகங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உயிர்த் தியாகங்களைச் செய்த அந்த அனைவரையும் இந்த சுதந்திர தினத்தில் நாம் விசேடமாக நினைவுகூர வேண்டும்.

1930, 40களில் நாட்டின் தலைவர்களின் கோரிக்கைகளின் பேரில் டொனமூர் ஆணைக்குழு, சோல்பரி ஆணைக்குழுக்களின் ஊடாக எமக்கு அவ்வப்போது இருந்து வந்த அழுத்தங்கள் நீங்கப்பெற்று 1948 பெப்ரவரி 4ஆம் திகதி நாம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம்.
சுதந்திரம் பற்றி பேசுகின்றபோது முப்பது வருடத்திற்கும் மேலாக எமது நாட்டை எல்.டி.டி.ஈ பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிப்பதற்காக போராடிய இராணுத்ததை நினைவுகூர்வது முக்கியமானதாகும். அவர்கள் உயிர்த் தியாகங்களைச் செய்தனர். கை, கால்களை இழந்தனர். அங்கவீனமுற்றனர். அவர்களது குடும்பங்களுக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டன.

பொருளாதார அழிவுகள் ஏற்பட்டன. இந்த நாட்டின் பொதுமக்கள் சுமார் ஒரு இலட்சம் பேர் உயிரிழந்தனர். ஆயிரக் கணக்கானோர் அங்கவீனமுற்றனர். இந்த முப்பது வருட யுத்தத்தில் மரணித்த அனைவரும் தோல்வியுற்றவர்களோ அதேபோன்று உயிர் வாழ்கின்ற அனைவரும் வெற்றி பெற்றவர்கள் என்றோ அர்த்தமாகாது. இந்த அனர்த்தத்தில் மரணிக்காது உயிர் வாழும் நாம் அனைவரும் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் முக்கியமானவை என நான் நம்புகிறேன்.

அன்று நாம் பேசிய சுதந்திரத்தைப் பார்க்கிலும் ஒரு சிக்கலான அர்த்தத்துடன் இன்று நாம் சுதந்திரம் பற்றி பேசுகிறோம். இன்று சுதந்திரம் பற்றி பேசுகின்றபோது முக்கியமாக மனித சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், பேசுவதற்கும் சிந்திப்பதற்கும் அமைதியாக ஒன்று கூடுவதற்குமான சுதந்திரம் என இன்று சுதந்திரம் மிகவிரிந்த பொருளில் பேசப்படுவதை நாம் அனைவரும் அறிவோம்.

அதேபோன்று 21ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான ஒரு நவீன அரசு என்ற வகையில் எமது உன்னத தாய் நாட்டை கட்டியெழுப்புவதற்கு முதலில் அரசின் ஸ்திரப்பாட்டையும் சமூக அபிவிருத்தியையும் அடிப்படையாகக்கொண்டு செயற்படுவது முக்கியமானதாகும்.

இதனை நிறைவேற்றுவதற்கு நாட்டில் இன நல்லிணக்கம், சமய நல்லிணக்கம் பலமாக இருக்க வேண்டியது அவசியமாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். நாம் இந்த விடயத்திற்கு அரசு என்ற வகையில் அர்ப்பணிப்புடன் உள்ளோம். இதற்கு முன்னுரிமையளித்து செயற்படுகிறோம் என்பதை குறிப்பாக நான் இங்கு சொல்ல வேண்டும்.

நாட்டில் இன நல்லிணக்கம், இன ஐக்கியத்திற்காக அரசு என்ற வகையில் நாம் முன்னெடுத்துள்ள பல நிகழ்ச்சித்திட்டங்கள் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பாராட்டைப் பெற்றுள்ள அதேநேரம், அதற்கெதிராக செயற்படும் சந்தர்ப்பவாத சக்திகளும் உள்ளன என்பதையும் நான் தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன். இந்த சந்தர்ப்பவாத சக்திகள் குறுகிய நோக்குடன் செயற்பட்டு வருகின்றன. இவர்களை நாட்டுக்கெதிராக செயற்படுகின்ற சக்திகளாகவே நான் பார்க்கிறேன்.
சுதந்திரம் பற்றி வியாக்கியானம் செய்கின்றபோது முதலில் நாட்டின் பொருளாதார சுதந்திரத்திற்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும். பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு கல்விமான்களின் அறிவு திறன்கள், புதிய உற்பத்தித்திறன், விவசாய சமூகத்தினர் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் சக்தி அவர்களது அர்ப்பணிப்பு என்பவற்றை நாம் ஒருபோதும் மறந்துவிடவில்லை.

எமது புதிய தலைமுறை தொழில்நுட்ப அறிவையும் திறன்களையும் பெற்றுக்கொள்வதற்கு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது. இது அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு மிகுந்த தாகத்துடன் செயற்படும் ஒரு யுகமாக நான் பார்க்கிறேன். எமது புதிய தலைமுறைக்கு அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்கு அறிவுப் பொருளாதாரத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உலகத்தை வெற்றிகொள்வதற்கு தேவையான வழிகாட்டலை அரசு என்ற வகையில் முன்னுரிமையளித்து நிறைவேற்றி வருகிறோம். ஊழல்களை ஒழித்து நாட்டில் சகவாழ்வை ஏற்படுத்த அரசு ஊழியர்களும், அரசியல் வாதிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்” என்றார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …