மத அச்சுறுத்தல்கள் தொடர்கிறது ; கிழக்கு முதலமைச்சர் குற்றச்சாட்டு
சிறுபான்மையினரின் மத மற்றும் கலாசார நடைமுறைகளுக்கு தற்போது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்கள் வழங்கப்பட்டால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தாமே தீர்வை காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கிழக்கில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வரும் வேலையில்லாப் பட்டதாரிகளை விரைவில் கிழக்கின் வெற்றிடங்களுக்கு உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நாட்டில் இடம்பெற்ற போர் மற்றும் வறுமை காரணமாக கிழக்கு மாகாணத்தில் பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அமைப்பின் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சிறுவர்களுக்கு கல்வி வழங்குவதற்கான திட்டங்களை வகுப்பதற்கு யுனிசெப் நிதியுதவி வழங்க வேண்டுமென கிழக்கு முதலமைச்சர் இதன் போது யுனிசெப்பின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜீன் கப்பிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன், சிறுவர்களுக்கிடையிலான போதைப்பொருள் பாவனை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.