இரகசிய இராணுவக் கொலைக் குழுவை நான் இயக்கவில்லை! – கோட்டா கூறுகின்றார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, இரகசிய இராணுவக் கொலைக் குழுவை இயக்கி ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபட்டார் என்றும் கோட்டாபய தெரிவித்துள்ளார்.
2005 முதல் 2009 வரை இலங்கை இராணுவத் தளபதியாகப் பணியாற்றிய சரத் பொன்சேகா தனது கட்டுப்பாட்டின் கீழ் இராணுவத்தினர் காணப்பட்ட காலத்தில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க வேண்டும் எனவும் கோட்டாபய வலியுறுத்தியுள்ளார்.
லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கு கல்கிஸை நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை சமர்ப்பித்தனர்.
லசந்த விக்கிரமதுங்க கொலை மற்றும் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, கோட்டாபய ராஜபக்ஷவால், இயக்கப்பட்டு இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் தலைமையில் செயற்பட்ட இரகசிய இராணுவக் குழுவொன்றே பொறுப்பு என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சாட்சியம் அளித்துள்ளார் என்று குற்றப் புலனாய்வுப்பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், ஏ.எவ்.பி. செய்தி நிறுவனத்துக்குக் கருத்து வெளியிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, இந்தக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்துள்ளார்.
“இந்தக் கொலைகளுடன் எந்தத் தொடர்புகளும் இல்லை என்று நான் மறுக்கின்றேன். இரகசிய தாக்குதல் குழு செயற்பட்டது பற்றித் தெரிந்திருந்தால், இராணுவத் தளபதி என்ற வகையில் சரத் பொன்சேகா என்ன நடவடிக்கை எடுத்தார்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

