தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இரு மாணவர்கள் நேற்றுமுன்தினம் நோயாளர் காவுவண்டியில் சென்று பரீட்சை எழுதினர். மருத்துவ நிபுணர் தனது மேற்பார்வையில் மாணவர்கள் இருவரையும் பரீட்சை நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். தாதியரும் உதவிக்குச் சென்றனர்.
ஒருவருக்கு டெங்குக் காய்ச்சல், மற்றையவர் பாம்புக்கடிக்கு இலக்கானவர். இவர்கள் குப்பிளான் மற்றும் வசாவிளான் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுகிறார்கள்.
பரீட்சை இடம்பெறும் காலத்தில் டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஒருவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
பாம்புக் கடிக்கு இலக்கானவர் மோட்டார் சைக்கிளில் வரும்போது அதிலிருந்தும் தவறி வீழ்ந்திருந்தார். பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் என்ற அடிப்படையில் இணுவிலைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஒருவர் இந்த விடயத்தில் சிறப்புக் கவனம் செலுத்தினார்.
இரு மாணவர்களுக்கும் பரீட்சை எழுதும் உடல்தகுதி இருந்தது. எனினும், அவர்கள் இரு நாள்கள் மருத்துவர்க ளின் கண்காணிப்பில் இருப்பது சிறந்தது என மருத்துவர் கருதினார்.
இதனையடுத்து இரு மாணவர்களும் நோயாளர் காவுவண்டியில் சென்று பரீட்சை எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பரீட்சை எழுதும்நேரம் வெளியில் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் இருந்தார்.
இவ்வாறு மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்கு ஏற்பாடு செய்த மருத்துவர் தொடர்பில் கல்விச் சமூகம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.