முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் 87 ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்பட்டனா் என்றும், 13 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர் என்றும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஊடக ஒடுக்குமுறை கடந்த ஆட்சியில் அதிகமாக காணப்பட்டதென சுட்டிக்காட்டிய அமைச்சர் மங்கள, சில ஊடகவியலாளர்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லையென மேலும் தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இலங்கை பத்திரிகை பேரவையின் ஊடகக் கல்வி இதழியல் டிப்ளோமா கற்கைநெறி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கடந்த அரசாங்கம் பல்வேறு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தியும், பலவந்தமாக தலையீடு செய்தும் ஊடக நிறுவனங்களை ஒடுக்கியதாக குறிப்பிட்ட அமைச்சர் மங்கள, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்நிலை மாற்றமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஊடக நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்குவதற்கு சாதகமான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், செய்திகளை திரிபுபடுத்தாமல் உண்மைகளை வெளிக்கொணர்வது அவசியமென மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கடந்த ஆட்சிக்காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களையும் அமைச்சர் இதன்போது நினைவுகூர்ந்தார்.