Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சம்மாந்துறை நௌசாத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைக்கப் பேச்சு

சம்மாந்துறை நௌசாத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைக்கப் பேச்சு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.நௌசாத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ளுமாறு அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு மிகவும் பின்னடைந்து காணப்படும் நிலையில் எதிர்வரும் தேர்தல்களை எதிர்நோக்கும் வகையில் முன்னாள் எம்.பி. நௌசாத்தை கட்சியில் இணைப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் விரும்பியுள்ளார்.

அந்த வகையில் ஏ.எம்.நௌசாத்துடன் மு.காவினர் பேச்சில் ஈடுபட்டிருக்கின்றனர்.

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சம்மாந்துறை சார்பில் உங்களை வேட்பாளராக நிறுத்துவதுடன் தற்போது மாகாண சபை உறுப்பினராக உள்ள ஐ.எல்.எம்.மாஹீருக்கு தேர்தல் கேட்க வாய்ப்பு வழங்க மாட்டோம் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.

இதனை கவனமாக செவிமடுத்த ஏ.எம்.நௌசாத், அமைச்சர் ரவூப் ஹக்கீமை பற்றிய கடந்தகால அனுபவம் இருப்பதாகவும், தான் மு.காவில் இணைந்து கொள்வதாயின் சில கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஏ.எம்.நௌசாத் முன்வைத்த கோரிக்கையானது மு.காவால் நிறைவேற்ற முடியாத பெரும் கோரிக்கை எனத் தெரியவருகின்றது.

நாடாளுமன்றத் தேர்தலிலும் தன்னை வேட்பாளராகப் போட வேண்டும் என்ற கோரிக்கையும் அதில் ஒன்றாகும்.

இதேவேளை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹீர் தமது கட்சியின் உயர்மட்டத்தின் மீது கடும் கடுப்பில் உள்ளார் எனவும் கதைகள் கசிந்துள்ளன.

கட்சிக்கு விசுவாசமாகவும், நேர்மையாகவும் செயற்படும் தனக்கு கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குழிபறிக்க முற்படுவது கவலையளிக்கின்றது எனவும், எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விலகுவதில்லை எனவும் தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களிடம் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹீர் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரும் சம்மாந்துறைப் பிரதேசத்தில் புதியவர்களை மு.காவுக்குள் இணைப்பதை விரும்பவில்லை என்றும் கூறப்படுகின்றது.

நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு தொகுதி வாரித் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டால் சம்மாந்துறைத் தொகுதியிலிருந்து இலகுவாக நாடாளுமன்றம் செல்ல முடியும் என்ற எண்ணத்துடனுள்ள நிலையில் அதற்கு ஆப்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.நௌசாத் உள்வருவதை கடைசி வரை மன்சூர் எம்.பி. விரும்ப மாட்டார் என்றே சொல்லப்படுகின்றது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …