வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியுமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது முடிவை நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கவுள்ளார்.
இது விடயம் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறப்பட்டே தீர்மானம் அறிவிக்கப்படும் என்று அவர் நேற்றுத் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று, 23/2 இன் கீழான கேள்வி பதில், அமைச்சுகள் அறிவிப்பு ஆகியன முடிவடைந்த பின்னர் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ஸ எம்.பி. ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.
“பொது எதிரணியிலுள்ள 30இற்கும் மேற்பட்ட எம்.பிக்களின் கையொப்பத்துடன் வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும். இதுபற்றி தங்களின் நிலைப்பாடு என்ன?” என்று சபாநாயகரிடம் வினவினார் விமல் வீரவன்ஸ.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர், “இது பற்றி இன்று (நேற்று) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இது குறித்து சட்டப் பிரச்சினையொன்று முன்வைக்கப்பட்டது. எனவே, அது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்ற பின்னர் வியாழக்கிழமை மீண்டும் ஆராயப்படும்” என்றார்.
“நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து சட்டப் பிரச்சினை எதுவும் இல்லை” என்று விமல் வீரவன்ஸ எம்.பி. வாதிட்டார்.
இதன்போது எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “சபாநாயகரின் தீர்ப்பு கிடைத்த பின்னர் இவர்களால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கக்கூடியதாக இருக்கும். அதுபற்றி எமக்குப் பிரச்சினை இல்லை. எதிர்க்கவும் மாட்டாம். எனினும், தீர்ப்பு வருவதற்கு முன்னர் இவர்கள் ஏன் சத்தமிடுகின்றனர்? ஐ.நா. அலுவலகத்துக்கு முன்னால் சென்று பாயொன்றை விரித்து வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கச் சொல்கின்றனரா?” என்று வினவினார்.
இதனால், சீற்றமடைந்த விமல் வீரவன்ஸ எம்.பி, “இது அங்கொடை வைத்தியசாலை அல்ல. இது நாடாளுமன்றம்” என்று பிரதமரை விமர்சித்தார்.
அதன்பின்னர் கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில எம்.பி.,
“நீதிமன்ற விசாரணையில் இருக்கும் விடயமொன்று தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கமுடியாது. அதுபோல விசாரணை ஆணைக்குழுவிலுள்ள விடயம் குறித்தும் விவாதிக்கமுடியாது. எனினும், வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புபட்டது அல்ல. அதற்குப் புறம்பானதொரு விடயமே என்று நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, தீர்மானம் எடுக்கும்போது இந்த விடயத்தையும் கருத்தில்கொள்ளவேண்டும்” என்று தமது தரப்பு கருத்தை முன்வைத்தார்.
இதையடுத்து உரையாற்றிய ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க,
“நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்படவேண்டும். அது இன்னும் உள்வாங்கப்படவில்லை. அவ்வாறு உள்வாங்கிய பின்னரே அதை விவாதிப்பதா அல்லது இல்லையா என்பது பற்றி சட்ட ஆலோசனை பெறப்படும். எனவே, ஒழுங்குப்பத்திரத்தில் இடம்பெறுவதற்கு முன்னர் எப்படி சட்டப் பிரச்சினை ஏற்படும்?’ என்று வினா தொடுத்தார்.
“சட்டப் பிரச்சினை இருந்ததால்தான் அதை உள்ளடக்கவில்லை. நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து எனது முடிவை வியாழக்கிழமை அறிவிக்கவுள்ளேன். அதன்பின்னர் ஏனையவற்றை செய்யலாம்” என்று சபாநாயகர் பதிலளித்தார்.