Sunday , June 8 2025
Home / முக்கிய செய்திகள் / காணாமல் ஆக்கப்பட்ட சொந்தங்கள் எங்கே? – தேடி அலையும் உறவினர்களில் ஐவர் பெருந்துயரால் மரணம்!

காணாமல் ஆக்கப்பட்ட சொந்தங்கள் எங்கே? – தேடி அலையும் உறவினர்களில் ஐவர் பெருந்துயரால் மரணம்!

காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவினர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்கள் பல மாதங்களைக் கடந்துள்ள போதிலும் இது விடயம் தொடர்பில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தேசிய, சர்வதேச ரீதியில் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக உறவினர்களைத் தேடிப் போராட்டத்தை ஆரம்பித்தவர்களுள் 5 பேர் கடந்த ஆறு மாத காலத்துக்குள் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினமும் தாயொருவர் மரணடைந்துள்ளார்.

கொழும்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெள்ளைவானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ரொஷான் லியோன் (மகன்) மற்றும் அமலன் லியோன் (கணவர்) ஆகியோரைத் தொடர்ந்து தேடிவந்த ஜெசிந்தா பீரீஸ் என்பவரே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமது உறவுகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா அல்லது இல்லையா? என்பதை அறியாமலேயே அவர்களின் உயிர்கள் பிரிந்துள்ளமை பெருந்துயரமான சம்பவமாகும் என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இருக்கின்றனரா அல்லது அவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பதை அறிவித்திருந்தால்கூட அவர்களின் ஆத்மா சாந்தியடைந்திருக்கக்கூடும் எனவும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஜெசிந்தா பீரிஸ் என்பவர் தனது கணவனும், மகனும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நிலையில், நீதி கோரி பல வருடங்களாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.

கொழும்பில் கடற்படையின் இரகசிய முகாமில் கண்டெடுக்கப்பட்ட 12 அடையாள அட்டைகள் தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

வழக்கு விசாரணைகளிலும் கடந்த திங்கட்கிழமை ஜெசிந்தா பீரிஸ் பங்கேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இடம்பெற்ற போரின்போதும் அதன் பின்னரும் பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்த நிலையிலும், விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட நிலையிலும், கடத்தப்பட்டும் பலர் வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பிலும் காணாமல்போயுள்ளனர்.

இவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்துகொள்ளும் நோக்கில் உறவினர்கள் முன்னெடுத்த பல முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் உறவினர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் ஆரம்பமான போராட்டங்கள் 7 மாதங்களைக் கடந்தும் தொடர்கின்ற நிலையில் அரசு இதுவரை எவ்வித நியாயமான பதிலையும் வழங்கவில்லை.

இந்நிலையில், முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆரம்பித்த போராட்டம் 222ஆவது நாளாகத் தொடர்கின்றது. கிளிநொச்சியில் 237ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் ஆரம்பமான போராட்டம் 233ஆவது நாளாகவும், வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் மார்ச் 15ஆம் திகதி ஆரம்பமான போராட்டம் 7 மாதங்களைக் கடந்தும் தொடர்கின்றது.

கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு விடை தேடி போராட்டத்தை ஆரம்பித்த 5 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போன தனது மகனைத் தேடி வந்த முன்னாள் போராளி வீமனின் தாயார் ஈஸ்வரன் ருத்ராதேவி மாரடைப்பு காரணமாக கடந்த 31ஆம் திகதி உயிரிழந்தார்.

இதபோல், தனது கணவர் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் போராட்டத்தை ஆரம்பித்த துரைசிங்கம் ஈஸ்வரி, காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளையைத் தேடிவந்த மகேந்திரராஜா, தனது பிள்ளையைத் தேடி போராட்டத்தை ஆரம்பித்திருந்த கீர்த்தனா உள்ளிட்ட ஐவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ என்ற ஏக்கமும், மன அழுத்தமுமே இவர்களின் மரணத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv