தமிழர்களின் போராட்டங்களை கூட்டு எதிர்க்கட்சியுடன் ஒப்பிடாதீர்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் மேற்கொள்ளும் நியாயமான போராட்டங்களை தென்னிலங்கையில் கூட்டு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் போராட்டங்களுடன் ஒப்பிட வேண்டாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்கள் அரச காணிகளை தமக்கு வழங்குமாறு வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்கவில்லை எனவும், பூர்வீகமாக தாம் வாழ்ந்த நிலங்களை தம்மிடம் கையளிக்குமாறு வலியுறுத்தியே போராடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு – வேப்பவெட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் அடுத்த தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றும் பேராசையுடன் வடக்கு, கிழக்கு மக்கள் வீதிகளில் இறங்கி போராடவில்லை என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வடக்கு, கிழக்கு மக்கள் ஊடகங்கள் மூலம் தம்மை வெளிக்காட்டுவதற்கே போராட்டங்கள் நடத்துவதாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர, தெரிவித்திருந்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

