ஏவுகணை சோதனை நடத்திய ஈரானுக்கு அமெரிக்கா கடுமையாக எச்சரிக்கை
ஏவுகணை சோதனை நடத்திய ஈரான் நடவடிக்கைகளை அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும், ஈரான் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது.
அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக ஈரான், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் உள்ள குடிமக்களுக்கு அமெரிக்க விசாவை தடை செய்தார். இதற்கு பதிலடியாக ஈரான் நாட்டில் நுழைவதற்கு அமெரிக்கர்களுக்கு தடை விதித்தது ஈரான் அரசு.
மேலும், ட்ரம்ப் இவ்வளவு காலம் வேறு உலகில் வசித்துவிட்டு இப்போதுதான் அரசியல் உலகிற்குள் அடியெடுத்து வைத்திருப்பதாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப் ஆபத்தான வரவு என்றும் விமர்சித்தார். மேலும், ஈரான் அரசு கடந்த சில நாட்களுக்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது.
ஈரானின் இந்த நடவடிக்கைக்கு டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரானின் எதிர்ப்பு மற்றும் ஏவுகணை சோதனை குறித்து மைக்கேல் பிலின் கூறும்போது, “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறும் வகையில் ஈரான் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இதன்மூலம் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் ஈரான் பதற்றத்தை அதிகரிக்க முயல்கிறது.
எனவே ஈரான் கண்காணிக்கபட்டு வருகிறது. ஈரானின் செயல்களைக் கண்டு அமெரிக்க ஒன்றும் செய்யாமல் இருக்காது” என்றார்.
ஆனால் ஈரான் மீது எந்த மாதிரியான நடவடிக்கைகள் அமெரிக்கா எடுக்கும்? என்பது பற்றி அவர் எதுவும் கூறவில்லை.