வட.கிழக்கு மீளிணைப்பை தமிழர்கள் கைவிட்டுவிட்டனர்: ஐக்கிய தேசியக் கட்சி
புதிய அரசியலமைப்பினை மக்கள் கருத்துக் கணிப்பிற்கு செலுத்தக்கூடாது என்று நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான இரண்டு கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துவரும் நிலையில் பொதுமக்கள் கருத்துக் கணிப்பு அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்புப் பணிகள் உருவாக்கம் தொடர்பான இன்னும் யோசனையே பெற்று வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.
அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்ட வீதி வாரம் என்ற தொனிப் பொருளில் கண்டி – வில்கமுவ பிரதேசத்தில் வீதியை புனரமைப்பு செய்யும் பணியை உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கல் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல நேற்றைய தினம் ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வின் பின்னர் அங்கு நடைபெற்ற மக்கள் கூட்டத்திலும் அமைச்சர் உரைநிகழ்த்தினார்.
“நாங்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்கிவருகின்றோம். இன்னும் பிரிவுகளுக்கு வரவில்லை. கருத்துக்களையே பெற்று வருகின்றோம். அனைத்து யோசனைகளையும் நாடாளுமன்றத்தில் முன்வைப்போம். ஒழிந்து விளையாடும் விளையாட்டுக்கள் எதுவுமே இல்லை.
நாடாளுமன்றத்திலும், ஊடகங்கள் முன்பாகவுமே இந்த அரசியலமைப்பைத் தயாரிக்கின்றோம். புதிய அரசியலமைப்பை உருவாக்கிய பின்னர் மக்களின் விருப்பத்தையும் பெற வேண்டும்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி இந்த அரசியலமைப்பை உருவாக்கினால் அதனை மக்கள் நிராகரித்துவிடுவார்கள். மாகாண சபை முறைமையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி அறிமுகப்படுத்தியதால் முழு நாடுமே தீப்பற்றி எரிந்தது.
எனவே நாங்கள் சரி என்றால், மனச்சாட்சியுடன் பணியாற்றினால் புதிய அரசியலமைப்பை உருவாக்கியதன் பின்னர் மக்களின் விருப்பத்தைப் பெற பொதுமக்கள் கருத்துக் கணிப்பிற்குச் செல்ல வேண்டும். தமிழ் மக்கள் இன்று நாட்டின் பல பாகங்களிலும் பெருகியுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீளிணைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். எனினும் இன்று ஒரு விடயத்தை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அந்தக் கோரிக்கையை தமிழ் மக்கள் முழுமையாக கைவிட்டுவிட்டனர். சுதந்திரத்திற்குப் பின்னர் சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்தால் நாட்டிற்கு அவசியமான சிறந்த அரசியலமைப்பு ஒன்றை தயாரிக்க முடியும்” – என்றார்.




