மட்டக்களப்பில் வேலையற்றபட்டதாரிகள் காலவரையறையற்ற சத்தியாக்கிரகம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் சுமார் 1500 இற்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி காலவரையறையற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இன்று காலை 9 மணி தொடக்கம் இந்த சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குப் பின்னர் தற்போது வரை பட்டாரிகளாக வெளியேறியுள்ள சுமார் 1500 மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோட்டா முறையில் நியமனம் வழங்கும் ஏற்பாடுகள் முற்றிம் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த சத்தியாக்கிரகம் முனனெடுக்க்பபட்டு வருகின்றது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 70 பேர் 35 வயதைக் கடந்தவர்கள் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் ரீ. கிஷாந்த் தெரிவித்தார்.
பட்டதாரிகளின் திறமைகளை ஒரு குறிப்பிட்ட போட்டிப் பரீட்சைகளின் மூலம் அறிந்து கொள்ள முடியாது என்பதைக் கருத்திற்கொண்டு நேர்முகப் பரீட்சையின் மூலம் பட்டதாரிகளுக்கான நியமனங்களைப் பயிற்சியின் அடிப்படையிலாவது வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்குரிய நிதி மற்றும் ஏற்பாடுகளை மத்திய அரசு மாகாண சபைகளுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பட்டதாரி நியமனங்கள் பட்டம்பெற்ற ஆண்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பட்டதாரிகள் வேலை வாய்புப் பெறுவதற்கான வயதெல்லையை 45 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தள்ளார்.
பட்டதாரி நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரப்படும்போது ஏற்கெனவே அரச சேவையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாதவாறு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் ரீ. கிஷாந்த் குறிப்பிட்டுள்ளார்.