ஐ.நா அமர்வு நாளை ஆரம்பம் : மங்கள தலைமையிலான குழு ஜெனிவா பயணம்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோர் இன்று ஜெனிவா பயணமாகின்றனர்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி இருவரும் ஜெனிவா அமர்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த அமர்வின் போது ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த மேலும் 18 தொடக்கம் 24 மாதகால அவகாசத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
அத்துடன் இந்த தீர்மான அமுலாக்கத்திற்கு நிதி உதவிகளை வழங்குமாறும் அவர்கள் கோரவுள்ளனர்.
தற்போதுள்ள தீர்மானத்தை உன்னிப்பான சர்வதேச கண்காணிப்புடன் அமுல்படுத்தும் வகையிலான தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதுடன், இதற்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் மொன்ரிநீக்ரோ ஆகிய நாடுகள் இணை அனுசரணை வழங்கவுள்ளனர்.
எனினும் இந்த தீர்மான உள்ளடக்கங்கள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க செயலணியின் பல உறுப்பினர்களும் ஜெனிவா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
34 ஆவது ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் அடுத்த மாதம் 22 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹுசைன், ஸ்ரீலங்கா தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்த அறிக்கைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் பதிலளிக்க உள்ள நிலையில் கடந்த வாரம் ஜெனிவா சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தீர்மான அமுலாக்கத்தில் சர்வதேச கண்காணிப்பு இல்லாவிடின் அதனை அமுல்படுத்துவதற்கு மேலதிக காலஅவகாசத்தை வழங்க வேண்டாம் என சர்வதேச மனித உரிமைகள் பேரவைக்கு அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் தற்போதுள்ள தீர்மானத்தை அமுல்படுத்த மேலதிக கால அவகாசம் வழங்கும் நடவடிக்கை ஊடாக, சர்வதேசத்தில் இருந்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் மறைந்துவிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈ.பீ.ஆர்.எல்.ஏப் மேலதிக காலஅவசாகம் வழங்குவதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள அதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தனது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.




