இலங்கைக்கு கால அவகாசம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது புதிய தீர்மானம்
இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் புதிய தீர்மானம் 36 நாடுகளின் ஆதரவுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேறியதாக ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவை அறிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட புதிய தீர்மானமே மேற்படி வாக்கெடுப்பின்றி நிறைவேறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் கடந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. நாளைய தினம் இறுதிநாள் அமர்வுகள் நடைபெறவுள்ளன.
இன்று இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் புதிய தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போதே கடந்த 2015ஆம் ஆண்டு ஆதரவு வழங்கிய மனிதவுரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் 28 மற்றும் மேலும் 8 நாடுகளுடன் மொத்தமாக 36 நாடுகளின் ஆதரவுடன் மேற்படி தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
2015ஆம் ஆண்டு தீர்மான்தின் பரிந்துரைகளை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மனிதவுரிமைகள் பேரவையுடன் இணைந்து உறுப்பு நாடுகள் புதிய தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தனது பரிந்துரைகள் நடைமுறைப்படுத்துமாறும், 37ஆவது அமர்வில் எழுத்து மூல அறிக்கையையும், 40ஆவது அமர்வில் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.



