வடக்கு, கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா அரச படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் இம்மாதம் இரண்டு முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
அந்தவகையில் நாளை திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்த்தனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் 24 திகதி திங்கட்கிழமை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குழு ஒன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்த்தவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.
எனினும் நாளை இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் தீர்க்கமான முடிவு எட்டப்படுமிடத்து அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் எதிர்வரும் 24 திகதி இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்படலாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஐ,பி.சி தமிழ் செய்திக்கு தெரிவித்தார்.