ஐக்கிய தேசியக் கட்சிக்கு வருமாறு அதன் பொதுச் செயலாளர் தன்னை அழைத்துள்ளார் என்றும், பெரும்பாலான உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலைவரங்கள் குறித்து தான் ஆராய்ந்துவருகிறார் என்றும், முக்கிய தேர்தலுக்குரிய அறிவிப்பு வெளியான பின்னர் தனது அரசியல் பயணம் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிவகித்த திஸ்ஸ அத்தநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஐ.தே.கவிலிருந்து வெளியேறி மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கினார்.
இதனால், ஆட்சிமாற்றத்தின் பின்னர் அவரது அரசியல்வாழ்வு கேள்விக்குறியானது. அத்துடன், மஹிந்த அணியுடனான அரசியல் உறவுகளையும் முறித்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையிலேயே ஐ.தே.கவுக்குள் மறுபடியும் வருவதற்கு அவர் முயற்சித்து வருகிறார் எனக் கூறப்படுகின்றது. அதை உறுதிப்படுத்தும்வகையில் தற்போது கருத்து வெளியிட்டுள்ளார்.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர், திஸ்ஸ அத்தநாயக்க மறுபடியும் கட்சிக்குள் வருவதை விரும்பவில்லையெனவும் கூறப்படுகின்றது.
மாணவர் பருவத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக அரசியல் பயணத்தை ஆரம்பித்த திஸ்ஸ அத்தநாயக்க, சுமார் 35 வருடங்களுக்கு மேலாக அக்கட்சியில் அங்கம் வகித்தார். கட்சித் தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் உடனிருந்து ஆதரவு வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.