Monday , June 30 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மலையகப் பெண்கள் பணிப்பெண்களாக செல்வதை நிறுத்தவேண்டும்

மலையகப் பெண்கள் பணிப்பெண்களாக செல்வதை நிறுத்தவேண்டும்

மலையகப் பெண்கள் பணிப்பெண்களாக செல்வதை நிறுத்தவேண்டும்

வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாக மலையகப் பெண்கள் செல்வதை நிறுத்துவதோடு மாற்று வாழ்வாதாரத்தை கண்டடைய வேண்டுமென தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாக வேலைக்கு செல்வோர் அனுப்பும் பணமே ஸ்ரீலங்காவின் முதலாவது அந்நிய செலாவணி வருமானத்தைப் பெற்றுத் தருவதாகவும் இதில் மலையகப் பெண்களின் பங்களிப்பும் பாரியளவில் காணப்படுவதகாவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் மகளிர் அணியினரின் மகளிர் தின கொண்டாட்டங்களின் முதலாம் நிகழ்வு ‘உறவுக்கு கைகொடுப்போம் – உரிமைக்கு குரல் கொடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் நுவரெலியா பரிசுத்த திரித்துவ கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்க தலைவருமான பழனி திகாம்பரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய எம்.திலகராஜ் ”பெண்கள் பொதுவாழ்வில் ஈடுபடும்போது பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும். அதுபோலவே மறுபுறத்தில் ஆண்கள் பொதுப்பணிகளில் ஈடுபடுவதற்கு அவர்களின் பல்வேறு சுமைகளை தாங்கள் தாங்கிக்கொள்வதன் ஊடாகவும் பெண்கள் பொதுவாழ்க்கைக்கு பங்களிப்பு செய்கின்றார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நாங்கள் பொதுப்பணிகளில் ஈடுபடும்போது குடும்பத்தில் ஏற்படுகின்ற வெற்றிடத்தை எங்கள் குடும்பத் தலைவிகளே ஏற்கின்றனர். அவர்கள் குடும்ப நிர்வாகத்தைப் பொறுப்பேற்றுக்கொள்ளாத பட்சத்தில் ஆண்களுக்கும் பொதுப்பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவது சவாலானதே. அந்த வகையில் பொதுப்பணிகளில் ஈடுபடுவோரின் குடும்பத்தலைவிகள் தாய்மார் போற்றுதற்குரியவர்கள். எனவே அந்த உறவுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.

உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதும் நமது மகளிர் தின மகுட வாசகத்தின் ஒரு பகுதி. அந்த வகையில் மலையக தொழிற்சங்க அரசியல் வாழ்வில் ஆரம்ப காலம் தொட்டே ஆண்களும் பெண்களும் சரிசமமாகவே பங்களிப்பு செய்து வந்துள்ளனர். எமது தொழிற்சங்க பிதாவான கோ.நடேசய்யர் மாறுவேடமிட்டு தோட்டங்களுக்கு சென்று தொழிற்சங்க கட்டமைப்பை உருவாக்கும்போது அவருக்கு உறதுணையாக இருந்தவர் அவரது துணைவியார் திருமதி. மீனாட்சியம்மை. அவரும் ஒருபோராளியாக பத்திரிகையாளராக அரசியல் தொழிற்சங்க செயற்பாட்டாளராக உறுதியாக செயற்பட்டுள்ளார்.

மலையகத்தின் முதலாவது பெண் ஊடகவியலாளராகவும் ஈழத்தின் முதலாவது பெண் கவிஞராகவும் பெருமைபெற்றவர் அவர். அவர்களின் வழிகாட்டலில் வந்தவர்கள் நாம். எனவே அந்த கலாசாரத்தைப் பேணி பாதுகாக்க வேண்டும். தனிவீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து புதிய கிராமங்களுக்கு பெயரிட்டபோது முதலாவது பெயர் ‘நடேசய்யர் புரம்;’ என்றும் இரண்டாவது கிராமம் ‘மீனாட்சியம்மை புரம்’ என்றும் பெயரிட்டு அவர்ளது பணியை கௌரவம் செய்தோம்.

ஸ்ரீலங்காவின் தேயிலை எற்றுமதியில் அதிக வருமானம் ஈட்டியபோது அதில் நமது பெண்களே அதிகம் பங்கு வகித்தனர். இன்று தேயிலைத் தொழில்துறை வீழ்ச்சி அடைய தேயிலைக்கு பதிலாக அந்தப் பெண்களையே வெளிநாட்டு பணிப்பெண்களாக ஏற்றுமதி செய்து வருமானம் தேடும் துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அடுத்த மகளிர் தின விழாவின்போது இதனை கணிசமாக குறைக்கும் திடசங்கட்பத்தை நாம் கொள்ள வேண்டும். வெளிநாட்டுப் பணிப்பெண்களாக மலையகப் பெண்கள் செல்வதை நிறுத்துவோம் மாற்று வாழ்வாதாரத்தை கண்டடைவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவோம்“ எனத் தெரிவித்தார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …