போர்க்குற்ற வழக்கு விசாரணை : எச்சரிக்கிறார் சர்வதேச வழக்கறிஞர்
சிவில் யுத்தங்களின் போது இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடத்தப்படுகின்ற குற்றவியல் வழக்கு விசாரணைகள் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய வகையில் நடத்தப்படவேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வாறு இல்லாமல் குற்றவியல் வழக்கு விசாரணைகள் மோசமான முறையில் நடத்தப்படுமானால் அல்லாதுவிடின், இந்த நடைமுறையானது நியாயமானதாக நோக்கப்படாவிடின் அதிலிருந்து பெறப்படுகின்ற செய்தியும் கற்றுக்கொள்ளக்கூடிய விடயமும் பாதகமானதாக அமையும் என சர்வதேச குற்றவியல் சட்டத்தரணி கேய்ட்லின் ரெய்கர் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியான கசப்பான அனுபவங்கள் அடுத்த தலைமுறையினர் மத்தியிலும் பதிந்துவிடும் என தற்போது மியன்மாரிலுள்ள பிரிட்டிஷ் கவுன்ஸில் அலுவலகத்தில் நிலைமாற்றுகால நீதி தொடர்பான முக்கிய பொறுப்பையும் வகிப்பரான கேய்ட்லின் ரெய்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் ” நல்லிணக்கத்தில் சிறுவர்களின் வகிபாகம்: சர்வதேச அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் ” என்ற தலைப்பில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
சியரோலியோன் உட்பட பல உள்நாட்டு யுத்தங்கள் இடம்பெற்ற நாடுகளில் குற்றவியல் வழக்கு விசாரணைகளை நடத்திய சட்டத்தரணியான கேய்ட்லின் ரெய்கரும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றி கருத்து வெளியிட்டார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட கேய்ட்லின் ரெய்கர், நிலைமாற்று கால பொறிமுறைகளில் குற்றவியல் வழக்கு விசாரணைகளே முதன்மையான அவதானிப்பிற்குரிய விடயமாக அமைந்திருக்கின்றது.
நடைபெற்றவை (அநீதிகள்) தொடர்பில் நீதியை கோரி நிற்பதாக மக்கள் கூறும்போது அவர்கள் அர்த்தப்படுத்த விளைவது குற்றவியல் வழக்கு விசாரணைகளுடாக குற்றமிழைத்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதைக் காண்பதேயாகும்.
இது மாத்திரமே தனித்துவமான நடைமுறைகிடையாது. அனைத்து நீதிகளையும் இந்த நடைமுறை பெற்றுத்தரும் என்ற சுமை இன்றிய நிலையில் செயற்படும் போதே இது சிறந்த பெறுபேறைப் பெற்றுத்தரமுடியும்.
தனிப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகளை எதிர்கொள்வது மட்டுமன்றி மக்களை அறிவூட்டுவதற்கான சக்தியையும் குற்றவியல் வழக்கு விசாரணைகள் கொண்டுள்ளன.
அதாவது அடுத்த தலைமுறையை அறிவூட்டுகின்ற தகைமையைக் கொண்டுள்ளன.குற்றவியல் வழக்கு விசாரணைகள் மோசமான முறையில் நடத்தப்படுமானால் அன்றேல் இந்த நடைமுறையானது நியாயமானதாக நோக்கப்படாவிடின் அதிலிருந்து பெறப்படுகின்ற செய்தியானது கற்றுக்கொள்ளக்கூடிய விடயமானது பாதகமானதாக அமையும்.
இதனை முகங்கொடுத்து அனுபவிக்கின்ற சிறுவர்கள் அடுத்த தலைமுறைக்கும் இந்த மோசமான அனுபவத்தை எடுத்துச்செல்லும் துர்ப்பாக்கியநிலை காணப்படுகின்றது.
அந்தவகையில் எவ்வாறு குற்றவியல் வழக்கு விசாரணை நடைமுறை முன்னெடுக்கப்படுகின்றது எவ்வளவு தூரம் அது நியாயமானதாக அமைந்துள்ளது.
நீதிமன்றத்திற்கு முன்னால் ஆஜராகின்ற குற்றஞ்சாட்டப்பட்டவரின் உரிமையை எவ்வாறு நடத்துகின்றனர் என்பதும் கற்றுக்கொள்கின்ற அந்த நடைமுறைக்கு அவசியமானதாகும்.
குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்தையன்றி அதனை முடிவிற்கு கொண்டுவரும் நடைமுறையைக் காண்பிப்பதும் முக்கியமானதாகும்.




