Wednesday , June 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வாக்காளர் இடாப்பில் பெயரைப் பதிவது ஒவ்வொரு தமிழரினதும் பிறப்புரிமை! – சண். குகவரதன் தெரிவிப்பு

வாக்காளர் இடாப்பில் பெயரைப் பதிவது ஒவ்வொரு தமிழரினதும் பிறப்புரிமை! – சண். குகவரதன் தெரிவிப்பு

“வாக்குப் பலத்தால் இனவாதத்தை தூக்கியெறியலாம் என்பதைக் கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் தெளிவாக எடுத்துக்காட்டினார்கள். எனவே, இம்முறை வாக்காளர் பட்டியலில் ஒவ்வொரு தமிழனும் தனது பெயரைப் பதிய வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சண். குகவரதன்.

இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“வாக்குப்பலம் என்பது தமிழ் மக்களின் ஜனநாயகப் பலம். ஜனநாயக உரிமை. அதனை ஒவ்வொரு தமிழனும் பேணிப் பாதுகாக்க வேண்டும். கடந்த இனவாத ஆட்சியை வாக்குப் பலத்தால்தான் தமிழ் மக்கள் விரட்டியடிதார்கள் . எனவே, இம்முறை வாக்காளர் பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தமிழரும் தவறாது வாக்காளர் டாப்பில் தமது பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.

அதேவேளை, மேல் மாகாணத்தில் பரவலாக வாடகைக்கு வாழும் தமிழ் மக்களும் தாம் வாழும் விலாசத்தில் வாக்காளர் இடாப்பில் தமது பெயரை பதிவு செய்ய வேண்டும். வாடகைக்கு வாழ்கின்றோம் என்ற அசமந்தப் போக்கைக் கைவிட வேண்டும். வாக்குப்பலம் இருக்கும் வரையும் ஒவ்வொரு தமிழனும் மதிக்கப்படுவான் என்ற உண்மை உணரப்பட வேண்டும்.

வாக்குப்பலம் இல்லாத ஒவ்வொரு தமிழனும் நிராகரிக்கப்படுவான். எனவே, இன்றே உங்களது பெயர்களை வாக்காளர் இடாப்பில் பதிவுசெய்து ஜனநாயக உரிமையை உறுதிசெய்து கொள்ளுங்கள். அத்துடன் உங்கள் வீட்டுக்கு தேருநர் கணக்கெடுப்புப் படிவமொன்று கிடைக்கப்பெறவில்லையெனின் உங்கள் பிரிவின் கிராம அலுவலரிடம் அல்லது குறித்த மாவட்டத்தின் தேர்தல்கள் அலுவலகத்தில் அதுதொடர்பாக விசாரிப்பதற்குத் தயவுசெய்து நடவடிக்கையெடுக்கவும்.

இதற்கு தடை விதிக்கப்படுமானால் ஏதாவது காரணங்கள் கூறப்பட்டு நிராகரிக்க முயற்சிக்கப்படுமானால் உடனடியாக என்னை அணுகுங்கள். எனது அலுவலக முகவரி ( 298 , காலிவீதி வெள்ளவத்தை) .
இந்த நாட்டின் பிரஜையாக வாக்காளர் இடாப்பில் பதியப்படும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

அதேவேளை, வாக்காளர் இடாப்புக்களில் பதியப்பட்ட உங்களது பெயர், விபரங்கள் உள்ளனவா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

தேர்தல் நெருங்கும் வரை மெத்தனமாக இருந்துவிட்டு பின்னர் உங்கள் பெயர்களை தேட வேண்டாம். வாக்குரிமை தமிழர்களின் பிறப்புரிமை என்பதை மறக்க வேண்டாம்.குறிப்பாக மேல்மாகாணத்தில் வாடகை வீடுகளில் இன்று அதிகளவில் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். எனவே, அவர்கள் தாம் வாழும் வீட்டு விலாசத்தில் தவறாது பெயர்களைப் பதிய வேண்டும். இதனைக் கட்டயமாக மேற்கொள்ள வேண்டும். தயவுசெய்து இதுதொடர்பாக உங்கள் குடும்ப அங்கத்தவர்களை, அயலவர்களை, நண்பர்களை, தொழில் உதவியாளர்களை அறிவுறுத்தவும்.மேலும், உங்கள் வீட்டுக்குக் கிடைக்கப்பெறுகின்ற வாக்காளர்களைக் கணக்கெடுக்கும் படிவத்தைக் கிடைக்கப் பெற்றவுடனேயே அதனை முறையாகப் பூரணப்படுத்துவதற்கு தயதுசெய்து நடவடிக்கை எடுக்கவும்.

அத்துடன் உங்கள் வீட்டுக்கு வழங்கப்பட்டுள்ள தேருநர்களைக் கணக்கெடுக்கும் படிவத்தை யூலை 15ஆம் திகதி வரையிலும் முறையாகப் பூர்த்தி செய்து தேருநர்களைக் கணக்கெடுக்கும் அலுவலகங்களுக்குக் கையளிக்க முடியவில்லையெனில் அதனை மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தில் கையளிக்கவும்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …