“அமைச்சுகள் உட்பட சகல அரச நிறுவனங்களுக்குமான வாகன இறக்குமதியை இவ்வருடத்தில் முழுமையாக நிறுத்த அரசு தீர்மானித்துள்ளது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக அழிவடைந்த வீடுகளை மீள நிர்மாணிப்பதற்கான திட்டத்தை விரைவாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவ தேசிய சபை கூட்டத்தின்போதே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
“மண்சரிவு, வெள்ளத்தால் முழுமையாக சேதமடைந்த 640 வீடுகளை நிர்மாணிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். பகுதியளவில் பாதிக்கப்பட்ட 5,329 வீடுகளையும் திருத்தம் செய்வதற்காக முப்படையினர், சிவில் பாதுகாப்புப் படையினர், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
அனர்த்தத்தால் அழிவடைந்த வீதிகள், பாடசாலைகள், மின் வழங்கல் கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவை நிறுவனங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை விரைவாக எனக்கு வழங்கவேண்டும். அத்துடன், அந்த விடயம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
குறிப்பாக, புதிய வீடுகளை நிர்மாணிக்கும்போது மண்சரிவு ஆபத்துள்ள பிரதேசங்களுக்கு வெளியே காணிகளை இனங்காணவேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பற்ற பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்யவேண்டாம். எவரும் அத்துமீறிய குடியிருப்பாளர்களாகாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் அனைத்து தீர்மானங்களும் நாட்டு நலனுக்காக மேற்கொள்ளப்படும் கொள்கைத் தீர்மானங்கள் என்பதுடன், எவ்விதத்திலும் அரசியல் நோக்கங்களுக்காகவோ தேர்தலை மையப்படுத்தியோ தீர்மானங்கள் எடுக்கப்படக்கூடாது” எனவும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
மரணமடைந்த அனைவருக்கும் இழப்பீட்டை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. தற்போதைய அரசு ஆட்சிக்கு வரும்வரை அனர்த்தங்களால் மரணமடைபவர்களுக்கு 15 ஆயிரம் ரூபா மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டு வந்தபோதிலும் தற்போது அத்தொகை ஒரு இலட்சம் ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.